Friday, January 28, 2005

கருத்தரிக்க ஏற்ற வயது எது?

வாரப்பத்திரிகைகளின் நேரடிமோதல் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. குங்குமம் போனவாரம் "30 வயதுக்குமேல் குழந்தை பெறுவது ஆபத்து" என்று மக்களிடம் பீதிகிளப்பியிருப்பதை (முக்கியமாக சன் டீவி விளம்பரங்கள்மூலம்) அறிவோம். (அல்வாவும் இதைப் பதிந்திருந்தார்). இணையத்தில் குங்குமம் இல்லாததால் நான் படிக்கவில்லை. இதற்கு பதிலடியாக விகடன் இந்தவாரம் சில வல்லுனர்களை அணுகி இதைப்பற்றி அலசி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதைப்படித்தேன். வல்லுனர்களின் கருத்து சகிக்கவில்லை.

பல்வேறு காரணங்களினால் இப்போது பெண்கள் திருமணம் செய்யும் வயது அதிகரித்துவிட்டது. மேலும், திருமணமான உடனே குழந்தை பெற்று கொள்ளாமல், பல காரணங்களுக்காக மகப்பேறை தள்ளிப்போடுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். என்வே முப்பதுவயதுக்குமேல் குழந்தை பெற விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் முக்கியமான கேள்வி "30 வயதுக்குமேல் குழந்தை பெறுவது ஆபத்தா?" என்பதே. இந்த கேள்விக்கு விகடன் கட்டுரையின் பதில் "ஆபத்தே இல்லை" என்பதே. இங்குதான் எனக்கு கொஞ்சம் இடிக்கிறது.

சில முக்கியமான ஆதாரங்களை பார்ப்போம். மகப்பேறுக்கு முக்கியமான ஒன்று கருத்தரிக்கும் தன்மை (fertility). பெண்களின்வயது ஏறும்பொழுது கருத்தரிக்கும் தன்மை முப்பது வயதுக்குமேல் சற்றே குறைந்து, நாற்பது வயதுக்குமேல் மிகவும் குறைந்துவிடுகிறது. (பார்க்க Fig. 1). என்வே, வயது ஏறஏற, இயற்க்கையாகவே கருத்தரிக்கும் வாய்ப்பு குறைகிறது. இதனால்தான், செயற்கைமுறை கருத்தரிக்கும் முறையை நாடுபவர்கள் பெரும்பாலும் அதிக வயதுடைய பெண்களே. மேலும், வயது ஏறஏற கருச்சிதைவு (spontaneous abortion) ஏற்படும் சதவிகிதம் உயர்கிறது (Fig.1). என்வே, 30 வயதுக்குமேல் கருத்தரிப்பதில் ஆபத்தில்லை என்ற வாதம் சற்றே மேலோட்டமான பார்வையாக தெரிகிறது.

"கடந்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் சர்வே முடிவுகள் இதை உறுதிப்படுத்து கின்றன. இதன்படிப் பார்த்தால் பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு பாதுகாப்பான வயது முப்பது முதல் முப்பதைந்து வயது வரை! நாற்பது வயதுகூட ஓகேதான் என்கிறது இந்த சர்வே. பிளட் பிரஷர், சர்க்கரை வியாதி போன்ற நோய் களின் தாக்கம் நாற்பது வயதில் ஏற்படுவதற்கான வாய்ப்பு சிறிதளவு இருப்ப தால், கூடுதலான மருத்துவ அக்கறை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் சர்வே சொல்கிறது. எங்கேயோ போவானேன்... எங்கள் மருத்துவமனையிலேயே நாற்பது வயதுக்கு மேற்பட்ட பலருக்கு ஜம்மென்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. நெற்றியில் விரல், இரண்டு தலைகள், கூன் முதுகு போன்ற கோளாறுகளுடன் கூடிய குழந்தை பிறப்பதற்கு மரபியல் ரீதியான விஷயங்கள்தான் காரணமே தவிர, தாயின் வயது ஒரு காரணமாக இருக்க முடியாது. நெருங்கிய சொந்தத்துக்குள் கல்யாணம் செய்தால், இருபது வயதே ஆன பெண்ணுக்குக்கூட உடல்நலம் அல்லது மனநலம் குன்றிய குழந்தைகள் பிறக்கக் கூடும்" என்கிறார் ஒரு நிபுணர்!

இவர் குறிப்பிட்ட சர்வே எது எனத்தெரியவில்லை. ஒரே ஒரு சர்வேமூலம் காலம்காலமாக பற்பல ஆய்வுகள்மூலம் தெரியவந்த ஒன்றை நிராகரித்ததும் இல்லாமல் "பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு பாதுகாப்பான வயது முப்பது முதல் முப்பதைந்து வயது வரை" என்ற அபத்தத்தையும் உதிர்த்துள்ளார். தாயின் வயதுக்கும் கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுக்கும் தொடர்பில்லை என்ற அரைவேக்கட்டான பொன்மொழியையும் கூறியுள்ளார்.

குறைபாடான குழந்தைக்கு மரபியல் ரீதியான காரணங்களே மிகுதியென்றாலும், தாயின் வயது ஏறஏற குழந்தையின் மரபணுவில் மாறுதல்கள் ஏற்படுவதை பல ஆய்வுகள் தெரிவிகின்றன. முக்கியமாக "Downs Syndrome" கொண்ட குழந்தைகள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.(Fig. 2)சமீபத்திய ஆய்வுகளில், தந்தையின் வயதுகூட குழந்தையின் மரபணு மாறுதல்களை உருவாக்கக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆதரங்கள் இப்படி இருக்கையில்,

"முப்பது வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொண்டால் குழந்தைக்கு Ôடவுன் சின்ட்ரோம் இருக்கும் (பார்ப் பதற்கு நார்மலாகவே இருக்கும் இந்தக் குழந்தைகள் செயல்பாட்டில் மந்தமாக காணப்படும்) என்ற கருத்தையும் சரி என்று சொல்ல முடியாது. முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில் குழந்தை பெற்ற சிலருக்கு Ôடவுன் சின்ட்ரோம்Õ குழந்தைகள் பிறந்திருக்கலாம். சரியாக ஆராய்ந்து பார்த்தால், நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வது, கருவுற்றிருக்கும் காலத்தில் தவறான மருந்துகளை உட்கொள்வது ஆகியவை தான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும்" என்கிறார் ஒரு மருத்துவர்!!

இப்படியும் ஒரு நிபுணர் கூறுவது எனக்கு வியப்பளிக்கிறது!!

தற்பொழுது இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் சர்க்கரை வியாதி (type 2 diabetes) குறைந்தவயதிலேயே தாக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், முப்பது வயதுக்குமேல் கருத்தரிப்பதினால், மகப்பேறின் போது சர்க்கரைவியாதியின் தாக்கம் மேலும் அதிகமாகும் (gestational diabetes). இதனால், குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்கள் வரக்கூடும். மேலும், வயது ஏறஏற இரத்தக்கொதிப்பு மேலும் மகப்பேறு சார்ந்த இரத்தக்கொதிப்பு (pregnancy-induced hypertension) பாதிப்பும் அதிகம்.


இப்படிப்பட்ட நிலையில், சமுதாய அக்கரையில்லாமல், ஒரு வெகுஜன பத்திரிகையும் வல்லுனர்களும் இவ்வகையான கட்டுரையை வெளியிட்டது சற்றே வருத்தமளிக்கிறது. அதிலும், குழந்தைபெற ஏற்ற வயது 30-35 என்ற வகையில் இந்த கட்டுரை இருப்பது கண்டிக்கத்தக்கது.

முப்பது வயதுக்கு மேலும் சுகமான குழந்தைப்பேறை அனுபவிக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால், இதனைப் பொதுப்படையாக கூற முடியாது. அந்தந்த பெண்ணின் உடல்நலம், குடும்ப/பரம்பரை சார்ந்த உடல்நலம் போன்றவையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இன்னும் இந்த விஷயத்தில் பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. தகுந்த ஆய்வுமுடிவுகள் வரும்வரையில், தற்போதைய மருத்துவ ஆதாரத்தின்படி மகப்பேறை தள்ளிப்போட்டுக்கொண்டே போகாமல் இருப்பதே உத்தமம்.

American Society of Reproductive Medicine வலைத்தளத்தின் சுட்டி இது
Figures: New England Journal of medicine Nov 2004

Disclaimer: The above comments are the personal views of the author and readers are adviced to consult their own doctors for further information




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, January 17, 2005

சபாஷ் சரியான போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாளுக்குநாள் ஜெட் வேகத்தில் முன்னேறிவருகிறது. இன்று தெற்கு ஆப்ரிக்க அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் நான்காவது டெஸ்டில் நம்பமுடியாதவகையில் வெற்றி கண்டு, இந்த தொடரில் 2-1 என்றவகையில் முன்னணியில் உள்ளது. மேற்கிந்திய அணி, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, என வரிசையாக ஒவ்வொரு அணியையும் வீழ்த்தி, இப்பொழுது தெற்கு ஆப்ரிக்க அணியையும் ஒரு கைபார்த்துவருகிறது.

2004'ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் சரித்திரத்தில் ஒரு மைல்கல். தொடர்ச்சியாக 9 டெஸ்ட் போட்டிகளில் வென்றது ஒருமிகப்பெரிய சாதனை. இந்த வளர்ச்சிக்கு பலமுக்கிய காரணங்கள் உண்டு. அவர்களுடைய தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் (ஸ்டீவ் ஹார்மிசன், மாத்தியூ ஹொக்கார்ட், பிலின்டாஃப் மற்றும் சைமன் ஜோன்ஸ்) அனைவரும் மிகச் சிறந்தவகையில் விளையாடிவருகிறார்கள். இரண்டாவதாக, அவர்களின் துவக்க ஆட்டக்காரர்களான ஆன்ட்ரு ஸ்ட்ராஸ் மற்றும் டிரஸ்காதிக் இருவரும் சரியான ஃபார்மில் உள்ளனர். கடந்த ஆண்டின் மிகச்சிறந்த புதுமுகம் ஆன்ட்ரு ஸ்ட்ராஸ் என்றால் அது மிகையாகாது. புதிய விக்கெட் கீப்பரான ஜெரன்ட் ஜோன்ஸ் ஒரு நல்ல கண்டுபிடிப்பு. பிலின்டாஃபின் மட்டைத்திறனும் நன்கு வலுவடைந்துள்ளது. இது மற்றுமன்றி, ஆஷ்லி ஜைல்ஸின் சுழற்பந்து வீச்சும் மேம்பட்டுள்ளது. இப்படி கோர்வையாக அவர்களின் அணி ஒவ்வொரு ஆட்டத்துறையிலும் முன்னேறியுள்ளது. இந்த அணியின் ஒரே பலவீனம்: மத்திய மட்டையாளர் வரிசை. வாகன், தோர்ப், இருவரும் அவ்வப்போது சொதப்பிவிடுகிறார்கள்.

உலகின் தலைசிறந்த அணியான ஆஸ்திரேலிய அணிக்கு சவால்விடும் அளவில் தற்சமயத்தில் உள்ள ஒரே அணி இங்கிலாந்து அணியே என்பது என் கருத்து. இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் 'ஆஷஸ்' தொடர் ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.(இத்தொடரின் பல ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது). இனியும் உலகின் இரண்டாம்நிலை அணி இந்தியஅணி என கூறுவது கேலிக்கூத்தாகும். ICC உலக டெஸ்ட் வரிசையே இதற்கு சான்று. அனேகமாக அடுத்த பிரிடோரியா டெஸ்ட் மேட்சிலும் இங்கிலாந்தே வெற்றிபெறும் என நினைக்கிறேன். 'ஆஷஸ்' தொடர் ஒரு விருவிருப்பான தொடராக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இயன் போதமை இனி வர்ணனை பெட்டியில் சமாளிப்பது கடினமே!!!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, January 16, 2005

அரசு கட்டுப்பாட்டில் காஞ்சிமடம் !!

சற்றுமுன் தின வாந்தியில் தமிழக அரசின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டைப் பற்றி எழுதிவிட்டு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணயதளத்தை தட்டினால், தமிழக அரசு காஞ்சி மடத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதை படித்தேன்.

தின வாந்தியையே முறியடிக்கும் நிஜ வாந்தி செய்தியிது!!

அட சங்கரா!!!

கடைசி செய்தி: நம்ம தின வாந்தி விசேட நிருபர் மாதிரி பலர் கிளம்பிட்டாங்க போலிருக்கு. நான் சுட்டிய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நியூஸ் புருடா போலிருக்கு. (பழைய சுட்டியை சுடுக்கினால் வெத்து பக்கத்துக்குதான் போகும்!)

காஞ்சிமடத்தை அரசு எடுக்க எந்தமுடிவும் இல்லை அப்படினு ஒரு அதிகாரப்பூர்வமான நியூஸ் இதோ இருக்கு!!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, January 15, 2005

காஞ்சி வழக்கு

தின வாந்தி
(நடுநிலை நாளேடு)

காஞ்சி வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு

எமது விசேட நிருபர்

Chennai 15 Jan. உச்சநீதிமன்றம் காஞ்சி வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.அந்த மேல்முறையீட்டில் கூறியிருப்பதாவது:

1. ஜெயேந்திரர் இந்தியாவிலேயே இருக்கக்கூடாது. அவரை நேபாலத்துக்கு அனுப்ப வேண்டும். அரசு ஹெலிகாப்டரில் அவரை நேபாலம் அனுப்ப உதவிகள் செய்துதர தயாராக உள்ளோம்.

2. ஜெயேந்திரர் வழக்கு முடியும்வரை மெளனவிரதம் காக்க வேண்டும். இல்லையெனில், அவர் சாட்சிகளை கலைக்கக்கூடும்.

3. ஜெயேந்திரர் பூஜைகள் செய்யகூடாது. பூஜைகள் செய்து அவர் ஏதேனும் மாயையால் வழக்கை திசைதிருப்பக்கூடும்.

4. சட்டம் அனைவருக்கும்பொது என்பதால், தற்சமயத்தில் ஜாமீனில் இருக்கும் தமிழகத்திலுள்ள 2,12,276 பேர்களை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது. தேவையெனில், இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றுலா உதவித்தொகை அளிக்கவும் அரசு தயார்.

5. உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து "ஜாமீன்" என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


கடைசி செய்திகள்:

-அரசு தரப்பில் வாதாடிய கே டி எஸ் துளசி மீது மானநஷ்ட வழக்கு தொடர தமிழக அரசு முடிவு.

- ஜெயேந்திரர் வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சமஸ்கிரதத்திற்கு மாற்ற வேண்டும் - பா ஜ க கோரிக்கை
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இணைய உலா

நேற்று என் கணிப்பொறியின் விசைப்பலகையில் தவறுதலாக எதோ ஒரு பட்டனைத்தட்ட, இந்த இடத்தில் போய் சேர்ந்தேன். உங்களைப்பற்றி கூகிள் என்ன நினைக்கிறது என்பதை தட்டி பாருங்கள்.

வாய்விட்டுசிரித்தேன்..... இங்கே சென்றபிறகு. நீங்களும் சிரிச்சிட்டு வாங்க....

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, January 12, 2005

Blog O..Blog.

2004ம் வருடத்தில் வலையில் அதிகமாக தேடப்பட்ட ஆங்கிலச்சொல் "Blog" !! Merriam-Webster என்ற அகராதி பதிப்பாளர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது. இந்த அகராதிப்படி, Blog என்ற சொல்லின் பொருள்:

BLOG: noun [short for Weblog] (1999) : a Web site that contains an online personal journal with reflections, comments, and often hyperlinks provided by the writer

ஏற்கனவே "BLOG" சில Oxford அகராதிப் பிரிவுகளில் இடம் பிடித்துவிட்டது.
(ஏதாவது தமிழ் அகராதியில் "வலைப்பதிவு" என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறதா???)

உலக அளவில், 5 மில்லியன் வலைப்பதிவுகள் (Blogosphere) இருக்குமெனவும், ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒரு வலைப்பதிவு உருப்பெறுகிறது என்ற புள்ளிவிவரங்கள் வியக்கவைக்கிறது. தமிழ் வலைப்பதிவுகள் பெருமளவில் பெருகியதும் கடந்த ஆண்டில்தான். இத்தனை வலைப்பதிவுகள் இருப்பினும், தொடர்ச்சியாக செயல்பட்டுவருகின்றவை நான்கில் ஒரு பங்கு வலைப்பதிவுகள்தான். பெரும்பாலானவை தவனைமுறையில் புதுப்பிக்கப்படுபவை (என்னையும் சேர்த்து!! சோம்பேரித்ததனம்/ நேரமின்மை... போன்ற சாக்குகளை நான் கூறினாலும்... சட்டியில் இருந்தால்தான்... என்ற பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்கிறது!)

ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக பதிந்தாலும், தமிழில் எழுதுவதே என்னை பொருத்த அளவில் ஒரு கிக்கைத் தருகிறது. நான் கடந்த மூன்று நான்கு மாதங்களாக வலைமேய்ந்தும் அவ்வப்போது வலைப்பதிந்தும் வருகிறேன். முகம் தெரியாத பலரின் எண்ணங்களை, உணர்ச்சிகளை, மொழிப்பற்றை, விருப்புவெறுப்புகளை, என் இருக்கையில் அமர்ந்தபடியே உணர்வதின் அருமை, என்போன்ற வலைமேய்பவர்களுக்கு புரியும். முக்கியமாக எனக்குத்தெரியாத பலவிஷயங்களை பல்வேறு கோணங்களில் பலர் அணுகுவதை படிக்கும்போது, சே... எனக்கு இது தோணாம போச்சே எனப் பலமுறை நினைத்ததுண்டு. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தமிழ் வார்த்தையை கற்றுக்கொண்டு வருகிறேன் (நண்பர் பிகேசி க்கும் இதில் முக்கிய பங்குண்டு!)

இப்படிபல நல்ல விடயங்கள் இருந்தாலும், ஒரு சிந்திக்கும் சமுதாயத்தில் எற்படும் ஒருசில கருத்துவேறுபாடுகள் நம் வலைப்பதிவுகளிலும் தென்படுகிறது (சற்று மிகையாகவே). தனிநபர்கள் மீதும், குறிப்பாக சாதிரீதியான வாதங்களிலும் இது அமைவது சற்று வருத்தம் அளித்தாலும், இது தவிர்க்கமுடியாத ஒன்று என நினைக்கிறேன் ???

வலைப்பதிவுகளின் தாக்கம், படிக்கும்/எழுதும் வட்டத்தையும் தாண்டி பல்லாயிரம் மக்களை அடைந்ததற்கு சமீபத்திய உதாரணம்: சுனாமி. நம் சகவலைபதிவாளர்கள் பலர் இதில் ஆற்றிய சேவைக்கு என் சல்யூட்!அமெரிக்காவில், கடந்த தேர்தலின்போது வலைப்பதிவுகள் சக்கைபோடுபோட்டது நாம் அறிந்ததே. இன்று BBC 5Live வானொலி நிகழ்ச்சியில் Waterstones என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஜோ கார்டன் என்பவரை அவரின் Blog காரணமாக வேலைநீக்கம் செய்யப்பட்டதைபற்றி விவாதித்தார்கள். இப்படியும் நடக்குமா என்று நினைத்து வலையில் தேடுகையில், இந்தசில விஷயங்கள் தென்பட்டன:

http://seattlepi.nwsource.com/business/146115_blogger30.html
http://news.bbc.co.uk/2/hi/technology/3955913.stm

அய்யா.... வலைப்பதிவது முக்கியம்தான்....ஆனா...வேலை....என் பாஸ் வரா மாதிரி தெரியுது....

உடு ஜுட்!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, January 11, 2005

காப்புரிமைச் சட்டத்திருத்தம்

கடந்த மாத இறுதியில் இந்திய காப்புரிமை சட்டத்திருத்தம் ஒரு அவசரச் சட்டமாக (ordinance) கொண்டுவரப்பட்டுள்ளது. 1994 இறுதியில் உலக வியாபாரக் குழுமத்தில் (WTO) இந்தியா TRIPS (Trade-related Aspects of Intellectual Property Rights) ஒப்பந்ததில் கையெழுத்திட்டது. இதனை செயல்படுத்த பத்து ஆண்டு அவகாசம் கொடுக்கப்பட்டு, இக்கால அவகாசம் சென்ற ஆண்டு இறுதியோடு முடிவடைந்தபடியால், அவசர அவசரமாக இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்ப்பதால், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் இதனை விவாதிக்காமல் அவசர சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் முழு விவாதம் நடக்கும். இதனை இடதுசாரி கட்சிகள் மாற்றமின்றி ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறி.

இதுவரை இருந்த இந்திய காப்புரிமைச் சட்டம் (Indian Patent Act 1970) பொருள் காப்புரிமையாக (product patent) இல்லாமல், செய்முறை காப்புரிமையாக (process patent) இருந்தது. எனவே மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் வெளிநாட்டில் தயாராகும் பந்நாட்டு நிறுவனங்களின் மருந்துகளை செய்முறை மாற்றி generic வகையில் காப்பியடித்துவந்தனர். இதனால், மருந்துகள் குறைந்த விலையில் நம் நாட்டு மக்களுக்கும், மிகமுக்கியமாக, பிற வளரும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தன. புதிய சட்டத்தால், இனி இவ்வகையான தயாரிப்புகள் செய்ய இயலாது. தற்பொழுது நிலவையில் இருக்கும் 97% மருந்துகளுக்கு இச்சட்டம் பொருந்தாது. என்வே, உடனடியாக மருந்துகளின் விலையில் மாற்றமிருக்காது. இனிவரும் ஆண்டுகளில், புதிய மருந்துகளின் விலை மிகவும் உயர வாய்ப்புள்ளது. (ஆனாலும், அத்தியாவசியமான மருந்துகளின் விலையை அரசின் ஒப்புதலுடந்தான் நிர்ணயிக்கமுடியும்).

இச்சட்டத்திருத்தம் யாரை பாதிக்கும்? ஆய்வுப் பிரிவுகள் ஏதுமில்லாமல் generic வகையில் மட்டுமே மருந்துகளை தயாரித்துவரும் நிறுவனங்கள் இதனால் பெரிதும் பாதிக்கபட வாய்ப்புள்ளது. மேலும், புதிய சட்டம், மருந்துகளைத்தவிர, உணவு/விவசாய ரசாயனச் சோதனைப் பொருட்கள், நுண்ணுயிர்பிரிவு சோதனை பொருட்கள், மரபணுச் சோதனைப் பொருட்கள் போன்றவற்றுக்கும் பொருந்துவதால், இப்பிரிவுசார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். அதேவகையில், நம் நாட்டில் அறிவியல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்துவதின்மூலம் புதிய காப்புரிமை பெரும் நிறுவனங்கள் செழிக்கக்கூடும். பாதிப்பு சிறிதெனினும், வரும் ஆண்டுகளில், மருந்துகளின் விலையேற்றத்தால் அதிக பாதிப்புக்குள்ளாவோர் வசதியற்ற பாமரமக்களே. இதுவரை generic முறையில் இந்தியாவில் தயாரித்த மருந்துகளை பிற வசதியற்ற நாடுகள் குறைந்த விலையில் பெற்று வந்தன. இனி புதிய மருந்துகளை இவ்வாறு அவர்கள் பெற இயலாது. மற்றுமொரு வகையில் இதுவும் வளரும் நாடுகள் செய்யும் economic apaartheid தான்.

மேலதிக விவாதங்களுக்கு இங்கே செல்லலாம்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Counter