Saturday, February 19, 2005

மருந்துச்சீட்டும் பின்விளைவுகளும்

ராசாவின் பாட்டிக்கு கிருக்கெழுத்து மருந்துச்சீட்டினால் ஏற்பட்ட விபரீதத்தை படித்தேன். பாவம் அந்த வயதான பாட்டி. இத்தவறு நிகழ காரணமான மருத்துவரின் அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது. மருந்துக்கடையின்மீதும் தவறிருக்கிறது. மருந்துச்சிட்டில் ஏதேனும் சந்தேகமிருந்தால் உடனடியாக குறிப்பிட்ட மருத்துவரிடம் கலந்து ஆலோசித்தபின்னரே மருந்தை கொடுத்திருக்கவேண்டும்.

இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான விவாதத்தை துவக்க ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன். இவ்விஷயத்தில் நுகர்வோரின் தவறும் பங்களிக்கிறது. ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு அடிப்படை ரசாயினப் பெயர் (generic name) உண்டு. அந்த ரசாயினப் பொருளின் காப்புரிமை முடிந்தாலோ, அல்லது காப்புரிமை சட்டத்திற்கு அப்பாற்பட்ட பொருளாக இருந்தாலோ, அதே மருந்தை பல தயாரிப்பாளர்கள் வெவ்வேறு வர்த்தக பெயரில் (Trade name) விற்பனை செய்கிறார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட வியாதிக்கு அல்லது குறிப்பிட்ட உடல் பாகம் சம்பந்தப்பட்ட மருந்துகள் பல இருக்கும் நிலையில், மருந்து தயாரிப்பாளர்கள் குழப்பம் விளைவிக்கும் வகையில், இவ்வித மருந்துகளுக்கு ஒரே மாதிரியாக தொடங்கும் அல்லது முடியும் வர்த்தக பெயர்களை தருகிறார்கள். இந்தமாதிரியான பெயர் தவறுதான் இந்த நிகழ்ச்சியில் நடந்துள்ளது

சரி, இத்தவறுகளை குறைக்க என்ன வழி? மருத்துவர்கள் கிறுக்காமல் தெளிவாக மருந்துகளின் பெயர்களை எழுதவேண்டும். மருந்துக்கடைகளும் மருந்துச்சீட்டில் குழப்பம் இருந்தால் தாங்களாகவே முடிவு செய்து ஒரு மருந்தை கொடுக்காமல், மருத்துவரிடம் பேசியபின் மருந்தை விநியோகிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக UK'வில் மருந்துகளின் ரசாயினப் பெயரில் (generic name) தான் பெரும்பாலும் மருந்துச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால் தவறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் மருத்துவர் குறிப்பிட்ட மருந்து நாம் அணுகிய கடையில் இல்லையென்றால், சோம்பல் பார்க்காமல், மாற்று மருந்தை ஏற்க்காமல் வேறொரு கடைக்குச் சென்று வாங்க முற்படவேண்டும்.

இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? மருந்துச்சீட்டே இல்லாமல் நாம் எத்தனை முறை மருந்துகள் வாங்குகிறோம்! ஒருசில மருந்துகளைத்தவிர இவ்வாறு மருந்துகளை வாங்குவதோ, விற்பதோ சட்டவிரோதம். சமீபத்தில் சன் டீவியில் தூக்க மருந்து பிரச்சினையை சிறப்புக் கண்ணோட்டத்தில் அலசினார்கள். புதுவிதிகள்படி, தகுந்த மருந்துச்சீட்டுடன் மட்டுமே தூக்க மருந்துகளை வாங்கமுடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் கையெழுத்திட்டபின்னரே இந்த மருந்துகள் விநியோகிக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் உண்டு. தூக்க மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனையில்லாமல் உட்கொள்வது ஆபத்து. மேலும் இவைகளின் பல போதை மருந்துகள் போல் addict'ஆக வாய்ப்புகள் உண்டு. தூக்க மருந்து என்ற போர்வையில் பல போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதை தடுக்கவே இந்த நடவடிக்கை. இந்தவிதியை ஆட்சேபிப்பவர்கள் யார் தெரியுமா? மருந்துக்கடையாளர்கள்! இந்த நடைமுறையால் அவர்களின் விற்பனை தடைபடுகிறதாம்! என்ன ஒரு சமுதாயப் பார்வை!

இதைவிட கொடுமை போலிமருந்து வியாபாரம். இந்த குற்றத்தின் அளவு சரியான புள்ளிவிவரங்கள் இல்லாததால் நமக்கு தெரிவதில்லை. இந்த வருடம்முதல் மருந்துகளின் காப்புரிமைச் சட்டம் மாறியிருப்பதை நான் முன்பே பதிந்திருக்கிறேன். இது முழுவீச்சில் நிலுவையில் வந்தவுடன், இந்த போலிமருந்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புண்டு. போதும் போதாததுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகளை இன்னும் இந்தியாவில் விற்பனையில் விட்டுவைத்துள்ளது!

இந்தநிலை மாற இன்னும் விழிப்புணர்வு வரவேண்டும். தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி நாமே மருந்துகளை தேர்ந்தெடுத்து வாங்குவதை நிறுத்தவேண்டும். மருத்துவரிடம் தெளிவாக அவர்தரும் மருந்தின் பெயர், அதன் செயல்பாடு, இதர விலைவுகள் போன்றவற்றை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, நமக்கு நன்கு தெரிந்த, நம்பகமான கடையில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.

இதே விஷயத்தைப்பற்றி கணேசன் அவர்களின் பதிவுச் சுட்டி இங்கே

ஒரு கொசுறுச் செய்தி: உடல் வலி... அதிலும் முட்டு வலிக்கு சமீபத்தில் செலிபிரெக்ஸ் (Celebrex [celecoxib]) மற்றும் வையாக்ஸ் (Vioox [rofecoxib]) என்ற ஒருவகை மருந்துகள் விற்பனையில் உள்ளன. இந்த வகை மருந்துகளினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ உலகின் தலையாய மருத்துவஏடு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளை உபயோகிப்பவர்கள் தத்தம் மருத்துவரிடம் ஆலோசனை செய்தபின் மாற்று மருந்து உட்கொள்வது உத்தமம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, February 10, 2005

IKEA mania

மூன்று புக் ஷெல்ஃப், ஒரு டெஸ்க், என் மகளின் பெட்: இவை அனைத்தையும் என் காரின் டிக்கியில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி பயணம். இது சாத்தியமில்லை என சிலர் எண்ணக்கூடும். சத்தியமான உண்மை! பிரிட்டனில் உள்ள குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடும் நான் ஐகியா'விலிருந்து இந்த பொருட்களை வாங்கி வருகிறேன் என்று!



வீட்டை அழகு செய்ய குறைந்த விலையில், அதே சமயம் ஸ்டைலாகவும் இருக்கும் பொருட்களை வாங்க வேண்டுமா... ஐகியா (IKEA) இருக்க பயமேன்! ஐகியா கடையில் வீட்டுப் பொருட்களை வாங்குவது ஒரு புதுவிதமான அனுபவம்! இங்கு எல்லாமே நாம்தான். உள்ளே சென்றதும் கையில் ஒரு பென்சிலும் இன்ச் டேப்பும் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறுக்கும் நெடுக்குமாக (நம்மை போலவே) பலரும் இன்ச் டேப் சகிதமாக சுற்றிக்கொண்டிருப்பர். காட்சியில் வைத்திருக்கும் அனைத்து பொருட்களின் விலை சீட்டில் அந்தந்த பொருளை நாம் எடுக்க வேண்டிய இடத்தின் குறிப்பு இருக்கும். கடை முழுதும் இதே வழிமுறைதான். தேவையான பொருட்களின் இருப்பிடங்களை குறிப்பு எடுத்தபின், கடையின் இறுதியில் உள்ள கோடவுனில் நாமே அந்தந்த பொருட்களை ட்ராலியில் ஏற்றிக்கொண்டு பணம் செலுத்தியபின் காரில் ஏற்றிக்கொண்டு வரவேண்டியதுதான். அனைத்து பொருள்களும் தட்டையாக மடக்கிவைத்தே (flatpack) விற்கப்படுவதால் காரில் போட்டு எடுத்துவர மிகவும் சுலபம்.

இந்த ஐகியாமேனியாவை துவக்கியவர் இங்வார் காம்ப்ராட் என்பவர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். பால்காரனாக வாழ்கையைத் தொடங்கி, 1943'ல் ஸ்டாக்ஹோமில் ஐகியாவை துவங்கினார். தற்பொழுது 31 நாடுகளில் 186 கிளைகளைக் கொண்ட ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஐரோப்பவின் 10% சதவிகித மக்கள் உறங்குவது ஐகியா கட்டில்களில்தான். ஐகியாவின் பொருள் அட்டவணை புத்தகம் பைபிளை காட்டிலும் பெருவாரியான ஐரோப்ப மக்களின் வீட்டில் இருக்கிறது! ஐகியாவின் நிறுவனர் காம்ப்ராட்தான் 2004'ல் உலகிலேயே பணம் படைத்தவர் என்ற பேச்சும் எழுந்தது. இருப்பினும், 78 வயதான இவர் இன்றும் பந்தா இல்லாமல், அரசுப் பேருந்தில்தான் பயணம் செய்கிறாராம்!

ஞாயிற்றுக்கிழமையிலும் திநகர் ரங்கநாதன் தெருபோல் காட்சியளிக்கும் ஐகியா கடை, லண்டணில் புதிதாகத் துவக்கிய கடையை நேற்று முப்பதே நிமிடத்தில் மூடிவிட்டது!! காரணம்: முதல்நாள் தள்ளுபடி விற்பனையில் ஏற்பட்ட நெரிசலில் ஐந்துபேர் காயமடைந்து மருத்துவமனை செல்ல நேர்ந்ததால்தான்! காயமடைந்தவர்களை flatpack'ஆக எடுத்துச் சென்றிருக்காமல் இருந்தால் சரி!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 04, 2005

Pets Cellphone

அப்தாப் அஹமத் கோர்ட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது A14 நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிச்சல். அன்று தான் அவரது மோசடி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. நீதிபதி காரலின் லட்லோ'விடம் அஹமதின் காலதாமதத்தின் காரணத்தை அவரின் வக்கீல் தெரிவித்தார். வழக்கை ஒத்திபோடாமல், கோர்டிலிருந்து அஹமதை மொபைல் தொலைபேசியில் தொடர்ப்புகொண்டு தீர்ப்பை தொலைபேசியிலேயே கூறினார் (சமூகச் சேவை செய்யும்படியும், கட்டண அபரதமும் தண்டனையாக வழங்கப்பட்டது.) வழக்கு முடிந்தது. கோர்ட்டின் நேரமும் மிச்சம், அனாவசியமான செலவும் மிச்சம். இது நடந்தது இங்கிலாந்தில் உள்ள இப்ஸ்விச் நகர நீதிமன்றத்தில்.

நமது நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பல வழக்குகளில் பல்வேறு காரணங்களை காட்டி தேவையில்லமல் வாய்தாவும், ஒத்திவைப்பும் நடைபெறுகின்றன. சமீபத்தில் ஜெயேந்திரர் வழக்கில் கேமரா தொலைபேசிமூலம் விசாரணை நடந்ததாக படித்த ஞாபகம். பல வழக்குகளில் இத்தகைய வழிகள்மூலம் விசாரணையை துரிதப்படுத்தினால், நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிக்கமுடியலாம்.

மொபைல் தொலைபேசியின் தாக்கம் இப்பொழுது பெரிதும் பெருகிவிட்டது. குரங்கு கையில் பூமாலை என்ற வகையில் டெல்லி மாணவன் அடித்த கூத்தை சமீபத்தில் பார்த்தோம். Petsmobility என்ற நிறுவனம் வளர்ப்பு பிராணிகளின் கழுத்துப்பட்டையில் தொங்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் உண்டாகும் நன்மைகளை இந்த சுட்டி சுவாரசியமாக விளக்குகிறது. வாழ்வுதான்!









Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, February 01, 2005

நேயர் விருப்பம்

தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் என்றதும் என் நினைவிற்கு வருவது விவிதபாரதியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சிதான். ஒவ்வொருநாளும் விவிதபாரதி ஒருபக்கம் முழங்க, வேறொரு பக்கம் என் தாயார் தனக்குத் தெரிந்த இறைவழிபாட்டு பாடல்களை பாட, தரையில் ஹிந்து பேப்பரை விரித்து முந்தைய நாள் சார்ஜாவில் பாகிஸ்தானிடம் இந்திய தரும அடி வாங்கியதை படித்தபடி காபி உறிஞ்சும் சுகமே தனி. 1970/80'களில் வானொலி பெட்டி இல்லாத வீடே இருந்திருக்காது என்றால் அது மிகையாகாது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக டீவி வீட்டை ஆக்கிரமிக்க, வானொலி பெட்டியின் மவுசு குறைய ஆரம்பித்தது. ஆனாலும், அடிக்கடி வந்துபோகும் மின்வெட்டுகளின் போது இருட்டில் எங்களுக்கு துணை வானொலியே. கல்லூரி செல்லத்தொடங்கியவுடன் எனக்கும் வானொலிபெட்டிக்கும் இருந்த நட்பு அரவேவிட்டுபோனது.

புலம்பெயர்ந்த ஒருசில வருடங்கள் வானொலியை நான் கேட்கவேயில்லை. கடந்த ஒரு வருடமாக, வேலைக்கு காரில் செல்லும் போது வானொலியை மீண்டும் கேட்கத் தொடங்கினேன். இப்பொழுது பெரும்பாலும் கேட்பது பிபிசி நிகழ்ச்சிகள்தான். அதிலும் பிபிசி ரேடியொ 5 நியூஸ்/ஸ்போர்ட் பண்பலை அலைவரிசையே எனக்கு பிடித்தது. அன்றாட நடப்புகளை மையமாக வைத்து இதில் நடைபெறும் கலந்துரையாடல்கள், விளையாட்டுச் சிறப்பு வர்ணனைகள், இடையிடையே வானிலை, போக்குவரத்து செய்திகள், மற்றும் கலையுலக கிசுகிசுக்கள் என்று பட்டையை கிளப்புவார்கள். பயண அலைச்சலே தெரியாமல் அலுவலகம் வந்தடைவேன்.

இந்த வார நட்சத்திரம் பத்ரி விளையாட்டுக்கென ஒரு தனி தமிழ் வானொலி நிலையம் வரவேண்டும் என்றவகையில் எழுதியிருப்பதை படித்தேன். நல்ல எண்ணம். ஆனால் கிரிக்கெட்டைத்தவிர மற்ற ஆட்டங்களின் நேரடி வர்ணனைகள் (தமிழ்நாட்டில்) எந்த அளவிற்கு எடுபடும் என்பதுதான் கேள்வி. நீண்ட இடைவெளிக்கு பிறகு சூரியன் வானொலி அலைவரிசை மூலம் மீண்டும் வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளை கேட்கும் (துர்)பாக்கியம் கிடைத்தது. சகிக்கவில்லை. ஒருமணி நேரம் நேயர்விருப்பம் போன்ற ஒரு நிகழ்ச்சியை கேட்டேன். ஒரே வழிசலாக இருந்தது. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் வரும் தமிங்கலிசை தமிழ்குடிதாங்கிகளான மருத்துவரும் திருமாவும் இதுவரை கேட்கவில்லை போலும்!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Counter